Monday, June 11, 2012

கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை




மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது. இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. சளிபிடித்துக்கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது.

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.


கண்டங்கத்திரி கஷாயம்

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கப் நீரில் கொதிக்க வைத்து 1 கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும். அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும். இது தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு.








No comments:

Post a Comment